தஞ்சை கிளைச்சிறையில் கைதிகளுக்கான சிறை அதாலத்
- மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
- 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் கிளை சிறைச்சாலையில் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சுசீலா தலைமையிலும், கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் திருவிடைமருதூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்
சிவபழனி தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி தலைமையிலும், திருச்சி மத்திய சிறையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிமன்ற நடுவா் முருகேசன் தலைமையிலும் நடைபெற்றது.
இவற்றில் மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்த நிகழ்வில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா், இளநிலை நிா்வாக உதவியாளா் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.