உள்ளூர் செய்திகள்

பீக் அவர்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

Published On 2023-09-07 09:19 GMT   |   Update On 2023-09-07 09:19 GMT
  • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
  • தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு

கோவை,

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.

அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News