பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும்- தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கடிதம்
- ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், அதில் 50 பைசா மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது.
- ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் மட்டுமே ஆவின் பால் உற்பத்தியார்களையும், ஆவின் நிறுவனத்தையும் காக்க முடியும்.
கிருஷ்ணகிரி,
பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், பால் உற்பத்தியாளர்கள் தீவன விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் பாலுக்கான விலையை இந்த ஆண்டில் மூன்று முறை உயர்த்தி உள்ளனர்.
ஆனால் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை உயர்த்தவில்லை. தமிழகமெங்கும் தனியார் பால் ஒரு லிட்டர் 65 ரூபாய் வரை விற்கின்றனர். கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வரை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றனர்.
ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், அதில் 50 பைசா மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது. எனவே அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் மட்டுமே ஆவின் பால் உற்பத்தியார்களையும், ஆவின் நிறுவனத்தையும் காக்க முடியும்.
சமீபத்தில் ஆவின் பால் பொருட்களுக்கு விலை உயர்வை அரசு அறிவித்ததை அனைவரும் வரவேற்றனர். எனவே தமிழக முதல்வர், பால் கொள்முதல் விலையை உடனே உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.