தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
- தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
- அதிகபட்சமாக பூதலூரில் 44 மி.மீ. பதிவானது.
தஞ்சாவூர்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் பலத்த காட்சியுடன் கனமழை பெய்தது.
பின்னர் இரவிலும் மீண்டும் மழை பெய்தது.
இதேபோல் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி -மின்னலுடன் கனமழை கொட்டியது. தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதேபோல் வல்லம், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பூதலூரில் அதிகபட்சமாக 44 மி.மீ. மழை அளவு பதிவானது.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை முடிவடைந்த மழை அளவு (மி.மீ ) வருமாறு :-
பூதலூர் -44, திருக்காட்டுப்பள்ளி -36.20, வல்லம் -26, கும்பகோணம் -19, பாபநாசம் -18, திருவையாறு -8, தஞ்சாவூர் -5. மாவட்டத்தில் ஒரே நாளில் 166.80 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.