உள்ளூர் செய்திகள்

நெல்லித்துறையில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

Published On 2023-10-22 09:26 GMT   |   Update On 2023-10-22 09:26 GMT
  • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
  • கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பூதப்பள்ளம் அடர்ந்த வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான், காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

மேட்டுப்பாளையம் வனத்துறைக்குட்பட்ட நெல்லித்துறை பூதப்பள்ளம் சுப்பிரமணியன் என்பவர் தோட்டத்தில் நேற்று 5 ஆடுகள் கட்டப்பட்டிருந்தது.

அதில் ஒரு ஆட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றுள்ளது. அப்போது அங்கு நின்ற மற்றொரு ஆண்டின் கழுத்தையும் கடித்துள்ளது. இதனிடையே ஆட்டின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது சிறுத்தை ஆட்டை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவர சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன. இதோடு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News