உள்ளூர் செய்திகள்

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

Published On 2022-10-13 10:16 GMT   |   Update On 2022-10-13 10:16 GMT
  • கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
  • 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியதில், மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (வயது 11) என்ற சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், கியாஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News