நெல்லை மாவட்டத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு- மின்வாரிய அதிகாரி தகவல்
- தமிழகம் முழுவதும் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறிப்பட்டுள்ளது
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்பொழுது தட்கல் முறை யில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.