உள்ளூர் செய்திகள்

நாகை துறைமுகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நாகை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

காரைக்கால் மீனவர்களை நடுகடலில் சிறைப்பிடிக்க போவதாக மீனவர்கள் அறிவிப்பு

Published On 2023-01-14 08:53 GMT   |   Update On 2023-01-14 08:53 GMT
  • 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட மீனவர்கள் மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாகை துறைமுகத்தில் நடைபெற்ற 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நடுக்கடலில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.

அதனை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் திரண்டு அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் நாகை முதல் கோடியக்கரை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி மாநில மீனவர்களை சிறைபிடிப்பதாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு செல்ல தயாராக இருக்கவேண்டுமென துறைமுக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகளை, நாகை மீனவர்கள் சிறைபிடிக்க தயாராகி வருவதால், அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நாகை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.

Tags:    

Similar News