பொள்ளாச்சி அருகே பைனான்சியர் தற்கொலை
- ரவிச்சந்திரன் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 53). பைனான்சியர். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ரவிச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவர் ஒரே நாளில் திருப்பி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் கடன் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரன் தெரிந்த நபரிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை வாங்கி உறவினருக்கு கொடுத்தார். ஆனால் அவர் கூறிய படி கடனை திருப்பி கொடுக்கவில்லை.
இதனையடுத்து ரவிச்சந்திரன் வேறு ஒருவரிடம் இருந்த பணத்தை வாங்கி கடனை அடைத்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை வாங்கிய உறவினர் தலைமறைவானார். அவரை ரவிச்சந்திரன் தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ரவிச்சந்திரன் வாங்கிய கடன் ரூ.7 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.