விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட வேண்டும்
- மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி, பி1, புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மாங்கனீஸ், பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது.
- கருடன் சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 160 முதல் 165 நாள் நாள் வயதுடையது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் (விரிவு), வல்லம், மானாங்கோரை மற்றும் சூரக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ.12.50-க்கு வழங்கப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண்மை உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய பரவலாக்கம் செய்யப்படும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி, பி1, புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மாங்கனீஸ், பாஸ்பரஸ், அதிகளவில் உள்ளது. இது உடலில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி செய்து அதிக ரத்த அளவை அதிகரிக்க செய்யும். மாப்பிள்ளை சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 155 நாள் முதல் 160 நாள் வயதுடையது.
கருப்பு கவுனி அரிசியில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இவ்வரிசியில் உள்ள நார்ச்சத்தானது எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கருப்பு கவுனி ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 155 நாள் நாள் வயதுடையது.
கருடன் சம்பா அரிசி இயற்கை பேரழிவுகளான வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இவ்வரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் உள்ளது. கருடன் சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 160 முதல் 165 நாள் நாள் வயதுடையது.
எனவே விருப்பமுள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.