உள்ளூர் செய்திகள்

கடை அடைப்புக்கு ஆதரவு இல்லை

Published On 2023-06-10 13:17 IST   |   Update On 2023-06-10 13:17:00 IST
  • கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
  • மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஈரோடு, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீர் நிலைகளை சீரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் ஈரோடு கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து கடை கோடி விவசாய நிலங்களுக்கும் நீர் சென்று சேரும் வகையில் கட்டுமான பணிகள் தமிழக அரசு சார்பில் நடந்து வருகிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த வாய்க்கால் கட்டுமான பணியை நிறுத்த வேண்டி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராடுவது அவர்களது தார்மீக உரிமை. ஆனால் வரும் 12-ந் தேதி ஈரோட்டில் கடைகள் அடைப்பு என அவர்கள் அறிவித்து இருப்பதில் எங்களது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு உடன்பாடு இல்லை.

மின் கட்டணம், தொழில் வரி, டோல் கேட், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. மற்றும் ஆன்லைன் வணிகம் போன்றவற்றால் வணிகத்தை விட்டு 25 சதவீத வியாபாரிகள் வெளியேறி விட்டனர்.

மேலும் தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் பகல் முழுவதும் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமல் கடை அடைப்பு என அறிவித்து இருப்பது எந்த விதத்திலும் சரியானதாக இல்லை. எனவே 12-ந் தேதி நடக்கும் கடை அடைப்புக்கு எங்களால் ஆதரவு தர இயலாது.

எனவே கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News