உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,654 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-07-06 09:43 GMT   |   Update On 2022-07-06 09:43 GMT
  • பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
  • தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News