உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-12-09 15:10 IST   |   Update On 2022-12-09 15:10:00 IST
  • பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

சென்னிமலை:

தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 18 லட்சம் மக்களுக்கு குடிநீராகவும், கீழ்பவானி, தடப்பள்ளி – அரக்கன் கோட்டை, காளிங்கராயன், அவிநாசி-அத்திக்கடவு, வழியோர பாசனங்கள் என 10 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வரும் பவானி ஆற்று நீரை, நொய்யல் ஆற்றை போல மனிதர்கள் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்வதற்கு வழி வகுப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை இடையே 3,800 ஏக்கர், பவானிசாகரில் 1,084 ஏக்கரிலும் தொழிற் பேட்டைகளை அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட் கழிவுகளால் புற்று நோயால் திணறும் ஈரோடு மாவட்டத்திற்கு மற்றொரு பேரழிவு திட்டமாக இத்திட்டம் உள்ளது.

இத்திட்டத்தினை ரத்து செய்ய கோரி நேற்று பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தை ரத்து செய்ய அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வரும் 30-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News