கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
- கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (49). இவரது மகன் மணிகண்டன் (19). இவர் எழுமாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை குணமாகாததால் மன வேதனை அடைந்த மணிகண்டன் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
பின்னர் உறவினர்கள் அவரை முத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் அரசலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேலன் (54). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உடல்நிலை குணமாகாததால் மன வேதனையில் இருந்த வடிவேலன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அவரை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி காத்தம்மாள் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.