கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
- மின்விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ராஜமாணிக்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சிலுவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது52). எலக்ட்ரீசியனான இவர் சேலத்தில் உள்ள அலங்கார மின்விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டில் அலங்கார மின்விளக்குகள் பொருந்தும் பணிக்காக நேற்று ராஜமாணிக்கம் வந்தார். அப்போது அவர் கட்டிடத்தின் மேலே ஏறி மின்விளக்குகள் பொருத்தும் போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜமாணிக்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.