உள்ளூர் செய்திகள்

கோவையில் தண்ணீர் தொட்டியில் குதித்து மூதாட்டி தற்கொலை

Published On 2023-09-16 15:27 IST   |   Update On 2023-09-16 15:27:00 IST
  • பானுமதி கடந்த 3 நாட்களாக சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார்.
  • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செல்லம்மாள் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவரது மனைவி பானுமதி (வயது 63). இவர்களது ஒரே மகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். அவர் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.

கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். பானுமதி கடந்த 3 நாட்களாக சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்வத்தன்று இரவு தூக்கம் வராமல் அவதிப்பட்ட பானுமதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் எழுந்த உடன் பாலசுப்பிரமணியம் அவரது மனைவியை தேடினார். அப்போது அவர் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News