கோத்தகிரி பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க- அ.தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா
- சுயேச்சை கவுன்சிலர் கற்பகம் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 10- வது வார்டில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அரவேனு,
கோத்தகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயகுமாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் உமாநாத், செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி வடிவேல், தி.மு.க. கவுன்சிலர் வெஸ்லி மற்றும் சுயேச்சை கவுன்சிலர் கற்பகம் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது:-
ராஜேஸ்வரி வடிவேல் (10 -வது வார்டு அதிமுக கவுன்சிலர்):
மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலமாகியும் வார்டுகளுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதில்லை. இதனால் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காணப்படுகிறது. எனவே அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கடந்த 1998-ம் ஆண்டு மன்றத் தீர்மானத்தின் படி 10- வது வார்டில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக கோத்தகிரி தாசில்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்த பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பேரூராட்சி நிதி நிலையின் படி அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கற்பகம் ( 17 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர்):-
பேரூராட்சியில் நிதி நிலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள போதுமானதாக நிதி இல்லாவிடினும் புதர் செடிகளை வெட்டி அகற்றுவது, குடிநீர், தெருவிளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்ற மன்றம் நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை வார்டில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. எனவே வார்டுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
வெஸ்லி (11 வது வார்டு திமுக. கவுன்சிலர்):-
ஆளும் கட்சியை நம்பி மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். எனவே அரசின் நற்பெயரை மக்களிடம் காப்பாற்ற வேண்டியது அவசியம். எனவே வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதியை மன்றம் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து பேரூராட்சி மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.