உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள்.

கடன் தள்ளுபடி செய்த நகையை வழங்காததை கண்டித்து தர்ணா

Published On 2022-08-05 09:34 GMT   |   Update On 2022-08-05 09:34 GMT
  • நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

தரங்கம்பாடி:

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக 5 பவுனுக்கு குறைவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நகைக்கடன் பெற்றவர்கள் தங்கள் நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் பிரதீப் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலவேலியை சேர்ந்த வசுமதி என்பர் கடந்த 2019-ம் ஆண்டு நகை அடகு வைத்தது தொடர்பாக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியலில் பெயர் வந்தும் இதுநாள் வரையில் நகையை வழங்காமல் அலைக் கழித்துள்ளனர்.

இதனால் வேதனையடைந்த வசுமதி மற்றும் அவரது உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நகைகள் வழங்கப்படும் என கூறியதன்பேரில் தர்ணா போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

Tags:    

Similar News