சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மான்-வாலிபர் பலி
- எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது.
- விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 34). இவர் சுதந்திர தின விடுமுறையில் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார். விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் பணி புரியும் தனியார் நிறுவனத்திற்கு செல்ல காலையில் இரு சக்கர வாகன மூலம் புறப்பட்டு வந்துள்ளார் . சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர்- பங்காரம் நெடுஞ்சாலையில் மான் சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது. இருசக்கரத்தை ஓட்டி வந்த தமிழ்ச்செல்வனுக்கு நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டது. விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய தமிழ்செல்வனை மீட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.