கோப்பு படம்.
மழைப்பொழிவு குறைவதால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து சரிவு
- தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த வாரம் தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை பெய்தது. குறிப்பாக கேரளாவில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.
மழை தொடர்ந்து பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49 அடியாக உள்ளது நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 0.8, தேக்கடி 3, சண்முகா நதி அணை 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.