சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம்- வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்
- தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
- வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறாதவாறு நடவடிக்கை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம் பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.