உள்ளூர் செய்திகள்

பாளையில் 342 சிலிண்டர்களுடன் லாரி கடத்தப்பட்டதாக புகார்-போலீசார் விசாரணை

Published On 2022-11-04 09:31 GMT   |   Update On 2022-11-04 09:31 GMT
  • பாளை கே.டி.சி நகரில் செல்லத்துரை என்பவர் சிலிண்டர்களுடன் லாரியை நிறுத்தி இருந்தார்.
  • விசாரணையில் லாரியை தனியார் நிதி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

நெல்லை:

பாளை தியாகராஜ நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (50). கியாஸ் சிலிண்டர் லாரி டிரைவர். இவர் நேற்று பாளை கே.டி.சி நகர் தூத்துக்குடி 4 -வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள அரசு பஸ் டெப்போ அருகே சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 342 சிலிண்டர்களுடன் லாரியை நிறுத்தி இருந்தார்.

பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். இதன் பின்னர் அங்கு சென்று பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லத்துரை பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் லாரியை தனியார் நிதி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் சிலிண்டர்களுடன் லாரியை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News