ஆழிகுடி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பசுமை வீடு-கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
- பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்காக 08-01-2022 அன்று வேலை உத்தரவினை நேரில் சென்று வழங்கினார்.
- புதிதாக கட்டப்பட்ட வீட்டினை திறந்து வைத்து, சாவியினை பானுமதியிடம் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சிக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பானுமதி என்பவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் பழுதடைந்து ஆபத்தான நிலையிலுள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இதனை அறிந்த கலெக்டர் செந்தில்ராஜ் கடந்த 29-12-2021 அன்று பானுமதி வீட்டிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பானுமதி வசித்து வரும் வீடு 35 ஆண்டு காலம் பழமையான வீடு என்பதாலும், வீடு இருக்கும் மனைக்கு பட்டா இல்லை என்பதை கேட்டறிந்த கலெக்டர் வருவாய் துறை வாயிலாக உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் பானுமதிக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
மேலும், அவர்கள் வசிப்பதற்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்காக 08-01-2022 அன்று வேலை உத்தரவினை நேரில் சென்று வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று முழுமை அடைந்ததையொட்டி, கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று புதிதாக கட்டப்பட்ட வீட்டினை திறந்து வைத்து, சாவியினை பானுமதியிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜா, திருவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.