சீர்காழியில் விபத்தில் சிக்கிய கார்.
விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்த மயிலாடுதுறை கலெக்டர்-பொதுமக்கள் பாராட்டு
- எருக்கூர் புறவழிச்சாலை பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் திருவாரூரிலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- அரசு மருத்துவமனையில் காயம்அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க தலைமைமருத்துவரிடம் அறிவுறுத்தினார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற வாக்குசாவடிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சீர்காழி புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை திரும்பி சென்றார்.அப்போது எருக்கூர் புறவழிச்சாலை பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் திருவாரூரிலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த உசைன், செல்லதங்கம், செரினாபானு ஆகிய 3பேர் படுகாயம் அடைந்தனர்.
அவ்வழியாக சென்ற கலெக்டர் இரா.லலிதா இதனை பார்த்தவுடன் தனது காரினை நிறுத்திவிட்டு, நேர்முக உதவியாளரின் (ஊரக வளர்ச்சி) காரில் ஏற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தொடர்ந்து அரசு மருத்துவமனையில் காயம்அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க தலைமைமருத்துவரிடம் அறிவுறுத்தினார். கலெக்டரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.