கடலூரில் என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் மறியல்
- என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது.
- உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாணவர் அணி கோபிநாத், இளைஞர் அணி சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் தடா. தட்சிணாமூர்த்தி உட்பட 25 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.