கோவையில் நடுரோட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்-வாலிபர் கைது
- இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
- சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கூலி தொழிலாளி. இவர் கோவை சி.எம்.சி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பொது இடத்தில் வைத்து இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தார்.
அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளினார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவையை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.