உள்ளூர் செய்திகள்

திராவிட மாடலை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது-கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

Published On 2023-06-14 14:42 IST   |   Update On 2023-06-14 14:42:00 IST
  • எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
  • நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

கோவை,

கோவை பீளமேட்டில் உள்ள தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) மற்றும் எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜனதாவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவற்றை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.

.

தி.மு.க இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம். இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் தான் தி.மு.க. இயக்கம்.

கலைஞரின் வளர்ப்பு, தளபதியின் தம்பிகளாகிய நாங்கள், இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி கைதின்போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்பட்டு, மத்திய அரசு அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை,

நாங்கள் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News