உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி பெண் பலி 4 பேர் படுகாயம்

Published On 2023-07-30 07:59 GMT   |   Update On 2023-07-30 07:59 GMT
  • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
  • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News