உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய பெண் தேடிய தொழில் அதிபர்

Published On 2023-06-22 14:31 IST   |   Update On 2023-06-22 14:31:00 IST
  • ஆதிரா நான் கொடுத்த ரூ.56 லட்சம் பணத்தையும் மீட்டு தர வேண்டும்.
  • போலீசார் அர்ஜூன் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குனியமுத்தூர்,

கோவை போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஆதிரா (வயது 28). இவர் போத்தனூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் எனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வரும் அர்ஜூன் அய்யப்பன் (30) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

எனது கணவர் மற்றும் அவரது தந்தை அய்யப்பன் ஆகியோர் ெதாழில் தேவைக்காக பணம் வேண்டும் என என்னிடம் கேட்டனர். இதனையடுத்து நான் எனது தந்தையிடம் இருந்து ரூ.56 லட்சம் பணம் வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். அதன் பின்னர் சொகுசு கார் வேண்டும் என்றனர். அதையும் நான் எனது தந்தையிடம் இருந்து வாங்கி கொடுத்தேன்.

நான் எனது தந்தையுடன் சேர்ந்து தொழிலை கவனித்து வந்த நிலையில் எனது கணவர் அவருக்கு திருமணம் ஆகவில்லை எனவும் திருமணத்துக்கு பெண் வேண்டும் என ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு பெண் தேடி வந்தார்.

இந்த தகவல் எனக்கு தெரிய வந்ததும் எனது கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக நான் பாலக்காட்டுக்கு சென்று எனது கணவரிடம் இது குறித்து கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது தந்தை வாங்கி கொடுத்த சொகுசு காரை எடுத்துக்கொண்டு கோவைக்கு வந்து விட்டேன்.

எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு பெண் தேடி வந்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அவரது தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது தந்தையிடம் இருந்து நான் வாங்கி கொடுத்த ரூ.56 லட்சம் பணத்தையும் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன் அய்யப்பன், அவரது தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News