காரைக்கால் திரு.பட்டினத்தில் பூட்டிகிடக்கும் மதுபான கடையில் துணிகர திருட்டு: 2 பேர் கைது
- அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
- கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினத்தில் மெயின் சாலையில், இறந்த தொழில் அதிபர் ராமு மனைவி வினோதாவின் மதுபானகடை உள்ளது. இந்தக்கடை போலீஸ் வழக்கு தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது. இருந்தாலும், வினோதாவின் மகன் அஜேஸ்ராமு மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். சம்பவத்தன்று அஜேஸ்ராமு தனது நண்பர் வைத்தீஸ் என்பவருடன், வழக்கம் போல், கடையை கண்காணிக்க சென்றபோது, கடையின் பின்பக்கத்தில் உள்ள குடோனில் இருந்து, செட்டர் இரும்புத்துண்டுகளை 2 நபர்கள் திருடிச்சென்றதை பார்த்து, 2 நபர்களையும், விரட்டி பிடித்து, திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, அஜேஸ்ராமு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, திருவாரூர் சின்ன மேட்டு பபளையத்தைச்சேர்ந்த ஷாகுல் அமீது(வயது24), கரூர் தோகமலையைச்சேர்ந்த முகம்மது ஷாகுல் அமீது(26) ஆகிய 2 பேர் என்பதும், கடையில் ஆள் இல்லாததால், இரும்புத்துண்டுகளை திருடியதையும் ஒப்புகொண்டனர். அதன்பேரில், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.