உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

Published On 2023-09-04 09:20 GMT   |   Update On 2023-09-04 09:20 GMT
  • கர்ப்பிணிகள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கான காய்கறி, பழம், கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது
  • ஊட்டச்சத்து மாத உறுதிமொழியுடன் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது

கோவை,

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊட்டச்சத்து மாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

இந்தமாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News