ஆழியாளம் பகுதியில் தென்னை மரத்தில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.
தென்னையில் பூச்சி நோய் குறித்து விழிப்புணர்வு முகாம்
- சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் காணப்பட்டுள்ளது.
அதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கருந்தழைப்புழு, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டா மிருக வண்டு போன்ற பூச்சிகளும் கேரளா வேர் வாடல் நோய் மற்றும் தஞ்சாவூர் வாடல்நோய் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சூளகிரி வட்டாரத்திற்குட்பட்ட மாரண்டபள்ளி, பாத்தகோட்டா, காமன்தொட்டி, ஆழியாலம் ஆகிய கிராமங்களில் கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அதை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும் மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள்( நீளம் 3 அடி, அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்கிற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தங்கவைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் ஒட்டுண்ணிகள் பிராக்கான் பிரிவிகார்னிஸ் 1800 எண்கள் ஏக்கர் வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று விளக்கி கூறினார்.
இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர், ஸ்ரீ திவ்யா, இணை பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன் பால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.