2 மகள்களை கொல்ல முயற்சி- பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு
- முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம் பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ஜான்சிராணி(வயது 35). இவர்களுக்கு மோனிகா மேரி(12), ரித்திகாமேரி(9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவரின் நடவடிக்கையால் விரக்தியடைந்த ஜான்சிராணி 2 மகள்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று வீட்டில் இருந்தபோது ஜான்சிராணி தனது முதல் மகள் மோனிகாமேரியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மயங்கினார்.
பின்னர் கதவை பூட்டிவிட்டு 2-வது மகள் ரித்திகாமேரியுடன் வெளியே சென்ற ஜான்சிராணி விருதுநகர் மேம்பாலத்துக்கு வந்தார். அங்கு மேலே இருந்து தனது மகளை கீழே தள்ளிவிட்டு பின்னர் அவரும் குதித்தார். இதில் தாய்-மகள் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மோனிகாமேரியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் ஜான்சிராணி மீது கொலை முயற்சி செய்தது, தற்கொலைக்கு முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.