உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தியதாக கூறி பெண் மீது சரமாரி தாக்குதல்: போலீசார் விசாரணை

Published On 2023-07-21 09:42 GMT   |   Update On 2023-07-21 09:42 GMT
  • நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
  • பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

கடலூர்:

கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுடன் அவரது தாயார் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை. மேலும் அவருடன் தங்கி இருந்த அவரது தாயாரையும் 2 வயது குழந்தையையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் குழந்தையை காணவில்லை என்று கூச்சலிட்டார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்று எண்ணி கொண்டு விசாரித்தனர்.ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த குழந்தைகளை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பொதுமக்களிடமிருந்து இருந்து விடுவித்து அனுப்பி வைத்தனர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News