உள்ளூர் செய்திகள்

கிட்டிப்புல் விளையாட்டு தகராறில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை

Published On 2023-03-20 08:18 GMT   |   Update On 2023-03-20 08:25 GMT
  • அண்ணன் தப்பி ஓட்டம்-தம்பிக்கு அடிஉதை
  • தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் குணசீலன் (வயது 26). படிப்பை பாதியில் நிறுத்திய குணசீலன் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் தாமதாக தூங்கி எழுந்த குணசீலன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலையில் சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாட சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்குமார் (23), ஆரோக்கியதாஸ் (27) ஆகியோரும் விளையாடினர். அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர்.ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே குணசீலன் பரிதாபமாக இறந்தார்.இதைப்பார்த்த அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மார்ட்டின்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்தனர்.அவர்கள் கொலையுண்ட குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமறைவான மார்ட்டின் குமாரை தேடி வருகிறார். கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News