உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-11 08:37 GMT   |   Update On 2022-11-11 08:37 GMT
  • கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரியலூர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற அரசின் இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

Tags:    

Similar News