உள்ளூர் செய்திகள்

விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2022-10-06 08:37 GMT   |   Update On 2022-10-06 08:37 GMT
  • விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
  • மங்கள ஆரத்தி நடைபெற்றது.



அரியலூர்

விஜயதசமியையொட்டி தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விஜயதசமி அன்று அம்மன் துர்க்கை கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் வில் ஏந்திய கோலத்தில் காட்சி தருவதால் இக்கோவிலில் மட்டும் அம்மனுக்கு பதிலாக வில் ஏந்திய வேலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு வில்லேந்திய வேலவர் அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் புதிதாக செய்யப்பட்ட சிவப்பு குதிரை வாகனத்தில் வில்லேந்திய வேலவர் போர்க்கோலம் தரித்து எழுந்தருளி காட்சி தந்தார். பல்வேறு பதிகங்கள் பாடி பக்தர்கள் ஆராதனை செய்தனர். மங்கல இசை முழங்க வேதபாராயணம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ வீதிகளில் முருகப்பெருமானின் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கிழக்கு வீதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமானின் கையில் இருந்த வில்லை பெற்று கோவில் அர்ச்சகர் செந்தில் 8 திசைகளிலும் அம்பு எய்து அசுரனை வதம் செய்த காட்சி நடத்தப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். தொடர்ந்து கோவிலில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதுபோல் நாயகனைபிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மரகதவல்லி தாயாருக்கு வாராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News