ஜெயங்கொண்டம் அருகே வி.சி.க.வினர் சாலை மறியல்
- ஜெயங்கொண்டம் அருகே வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இன்று காலை நிழற்குடையின் மேல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் திருமாவளவனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர் கிராமம் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. பயணியர் நிழற்குடையின் மேல்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பலகை ஒட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று காலை நிழற்குடையின் மேல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் திருமாவளவனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை முன்னிலையில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலை ஓலையூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி. ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் கண் கொளஞ்சி, அன்பானந்தம், தனக்கோடி, கருப்புசாமி, கதிர்வளவன், இலக்கியதாசன், சின்ன ராஜா, இளவரசன், சுதாகர், வேல்முருகன், செல்வராஜ், சீனிவாசன், கோவிந்தசாமி, சிவகுமார், ஜெயராஜ், வீரபாண்டியன், ஆசிரியர் சுந்தர், மணிமொழியான், சிவக்குமார், சுரேஷ், சடையன் பேரன், அய்யாதுரை, சிவக்குமார், சக்கரவர்த்தி, மகாராஜன், பொன்னுசாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.