உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவு

Published On 2022-11-08 09:22 GMT   |   Update On 2022-11-08 09:22 GMT
  • கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
  • கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு

அரியலூர்:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் (வயது52). இவரது மகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து சுமார் ஒரு மாதம் கழித்து, இந்த மாணவிக்கு மருத்துவ இயக்குனரகம் நடத்திய கலந்தாய்வில் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அவர் பொறியியல் கல்லூரியில் செலுத்திய பணம் ரூ 2, 26,000 மற்றும் மாற்று சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

மாற்று சான்றிதழை மட்டும் கொடுத்த கல்லூரி நிர்வாகம் செலுத்திய தொகையை தரவில்லை. இதையடுத்து அந்த மாணவியின் தந்தை பாலசுப்ரமணியன், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் விவரம்: மாணவி உணவு விடுதிக்கு செலுத்திய பணம் ரூ 53 ஆயிரத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணம் ரூ 10,000 பிடித்துக்கொண்டு ரூ.43 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்காக கல்லூரியின் இணை நிறுவனமாக செயல்படும் எஸ்.ஆர்.எம் ஆக்சிஸ் என்ற நிறுவனத்தில் மாணவிக்கு செலுத்திய ரூ 25 ஆயிரத்தில் நிர்வாக செலவுகளுக்காக 2 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை 23 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க வேண்டும். நான்கு வார காலத்திற்குள் வழங்காவிட்டால் அதற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு முடிவடைந்து சேர்க்கை கல்லூரிகளில் சேர்க்கை இறுதி செய்யப்பட்ட பின்பு மாணவி கல்லூரியை விட்டு விலகி உள்ள காரணத்தால் அவர் கல்லூரியில் கல்விக் கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி வழங்க உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News