உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Published On 2022-06-19 08:46 GMT   |   Update On 2022-06-19 08:46 GMT
  • இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
  • வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் அன்னகெளந்தன் பெரியஏரி உள்ளது. இதில் 10 குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதில் மூன்று குடும்பத்தினர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். இதில் சிலர் அகற்றாமல் இருந்து வந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூரை வீட்டில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சண்முகம் (வயது 53), என்பவரது வீட்டின் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம் திடீரென தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனை மிகவும் கவனமாக பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பை தடுத்தனர்.

பின்னர் அவரை சமாதானப்படுத்திய போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், கருணாநிதி ஆகியோர் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றினர். மேலும் அங்கு குடியிருந்தவர்களில் சிலர் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News