மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
- மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.இத்திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.