அறிஞர் அண்ணா கலை-அறிவியல் கல்லுாரியில் கம்பன் கழக 7-ம் ஆண்டு விழா
- கம்பன் கழக விழா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார் விருது வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கம்பன் கழகம் சார்பில், ஏழாம் ஆண்டு கம்பன் கழக விழா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. பொருளாளர் ஸ்ரீரங்கன் வரவேற்றார். நில எடுப்பு துணை ஆணையாளர் சக்திவேல் மற்றும் கம்பன்கழக நிறுவனத் தலைவர் ரவிந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். கம்பன் கழக விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ்
எம்.பி., செல்லக்குமார் விருது வழங்கி பாராட்டினார்.
ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இணைச் செயலாளர் சிவராஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கம்பன் கழக இணைச் செயலாளர் தமிழ் திருமால் கம்பன் குறித்து சிறப்புரை ஆற்றினார். தீயணைப்பு நிலைய அலுவலர் மார்டின், என்னைக் கவர்ந்த நாயகன் ராவணன் என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் தனபால், உதயநிலவு கலைக்கூடம் உதயநிலவு, நேரு இளையோர் மையம் அப்துல்காதர் உள்பட பலர் பங்கேற்றனர்.