தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை -பெங்களூரு புகழேந்தி பேட்டி
- பெங்களூரு புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்
ஓசூர்,
ஓசூரில், அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, கே.பி. முனுசாமி போன்ற துரோகிகள் இதுகுறித்து பேசக்கூடாது. மேலும் பொதுக்குழுவை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தவரும் கே.பி. முனுசாமி தான்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எடப்பாடி பழனிசாமி, குற்ற உணர்வின் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு தயக்கம் ஏற்படும் என்பதால்தான், சபாநாயகர் ஒதுக்கீடு செய்யும் இருக்கைகளை மாற்ற வேண்டும் என்று அந்த அணியினர் துடிதுடிக்கிறார்கள்.
மொழி பிரச்சனையில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்த இரு மொழிக் கொள்கை நிலைப்பாடு தான் ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடும் ஆகும்.
ஆகவே 3-வது மொழி என்பதற்கும், அதை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி என்றும் பலிக்காது. தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராஜேந்திர கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.