உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர்

Published On 2023-07-18 09:12 GMT   |   Update On 2023-07-18 09:12 GMT
  • முதியவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
  • மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னூர்,

கோவை அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே செல்வராஜ் (வயது 55) என்பவர் குடியிருந்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் இவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரிடம் பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட செல்வராஜ், மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட அவர் மாணவியை மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றார்.

இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முதியவர், மாணவியிடம் இதுபோன்று 3 முறை அத்துமீறி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பெற்றோருடன் கேரளாவுக்கு சென்று விட்டார். கடந்த சில தினங்களாக மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது தாயார் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான தாய், மாணவியிடம் விசாரித்தார்.

மாணவி தனக்கு நடந்த அவலங்களை தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். உடனே மாணவியின் தாய் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி விட்டு இந்த வழக்கினை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News