உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட மாநகர சாலைகளை சீரமைக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு- மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2023-02-01 09:16 GMT   |   Update On 2023-02-01 09:16 GMT
  • மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
  • சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது.

நெல்லை:

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

புழுதி பறக்கும் சாலைகள்

குறிப்பாக பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, எஸ்.என்.ஹைரோடு வரை சாலைகள் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனை அவ்வப்போது தற்காலி கமாக சீரமைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே எஸ்.என்.ஹைரோட்டில் செல்லும் போது கடுமையான புழுதி பறக்கிறது. இதனால் ஆஸ்மா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வியா பாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாநக ராட்சி பகுதியில் நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான 112 கிலோமீட்டர் தூர சாலை உள்ளது. இதில் பழையபேட்டை முதல் கே.டி.சி.நகர் வரையிலான சாலைகளும் அடங்கும். இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தான் சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியினை கொண்டு நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகிறது.

முதல் கட்டமாக ரூ.10.66 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ரூ.17.92 கோடி மதிப்பீட்டிற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. வருகிற வாரம் இதற்கான பணிகள் தொடங்கும்.

இதன்படி சந்தி பிள்ளை யார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை சாலைகள் போடப்பட்டது. இதேபோல் டவுன் சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட சாலைகளிலும் புதிதாக பணிகள் நடை பெற்றுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவனந்தபுரம் சாலை, தாழையூத்து பகுதிகளில் சாலைகள் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News