வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
- வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்
கோவை,
கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஈஸ்வரி (39). இவர்களது மகன் சந்தோஷ்.இவர்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.
அப்போது சிறிது நேரம் கழித்து ரமேசின் வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் ரமேசின் பக்கத்து வீட்டை சேர்ந்த சதாசிவம் என்பவர் ரமேசுக்கு போன் செய்து வீடு தீப்பற்றி எரிவதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனே வீடு திரும்பினார். இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், ஏர் கூலர் மற்றும் ரேஷன் அட்டை, வங்கி புத்தகம், ஆதார் கார்டு, துணிமணிகள், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் எவ்வாறு வெடித்தது, கவனக்குறைவால் நடந்ததா அல்லது யாராவது சதி வேலையில் ஈடுபட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.