உள்ளூர் செய்திகள்

டி.பி.வி.வைகுண்டராஜா

ஆலங்குளம் தொழிலதிபர் நேரில் சந்தித்து மனு: வணிகர்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Published On 2023-08-24 08:48 GMT   |   Update On 2023-08-24 08:48 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆலங்குளம் தொழிலதிபர் டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார்.
  • வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கூறினார்.

ஆலங்குளம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொழிலதிபரும், வியாபாரிகள் சங்கத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார். அதன் விவரங்கள் குறித்து வியாபாரிகள் சங்க தலைவர் வைகுண்டராஜா கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்தும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அத்துமீறல் குறித்தும் முதல்- அமைச்சரிடம் தெரிவித்து ள்ளோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறைக்கு சொந்தமான கடை வாடகை விகிதங்கள் குறித்தும், நுகர்வோர் அமைப்பு என்னும் பெயரில் தேவையில்லாமல் வழக்குகள் போட்டு வணிகர்களை அலைக்கழிப்பது பற்றியும் தெரியப்படுத்தினோம்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News