கடலூரில் துணிகரம்: கடையை உடைத்து பணம் கொள்ளை
- நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை அருகே பைப் எலக்ட்ரிகல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை பாலகுரு என்பவர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகுரு பணம் வைத்திருக்கும் பெட்டி சென்று பார்த்தபோது பெட்டி யை உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 7000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாலகுரு திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடத்த கடையை பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைக்காமல் கடையின் பின்புறம் இருந்த தகர கூறையை உடைத்து கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.