உள்ளூர் செய்திகள்

ஆடித்தபசுக்காட்சியில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டம்.


லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்- சங்கரன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடித்தபசு காட்சி

Published On 2022-08-11 09:17 GMT   |   Update On 2022-08-11 09:17 GMT
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  • திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.

இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.

மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.

விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News