உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Published On 2023-11-01 09:00 GMT   |   Update On 2023-11-01 09:00 GMT
  • கணவருடன் கருத்து வேறுபாடு எதிரொலி
  • அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.ஆர்.எம்.வீதியை சேர்ந்தவர் முரளி.

இவரது மனைவி செல்வி (வயது42). இவர்களுக்கு சஞ்சய்ராம் (14) என்ற மகனும், ஆத்மிகா(5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் செல்வி, தனது கணவரிடம், நம் குழந்தைகளுடன் நாம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறியுள்ளார்.

அதற்கு முரளி, தனது தாயை தனியாக விட்டு, நான் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தனிக்குடித்தனம் வர மறுப்பு தெரிவித்து விட்டு வெளியில் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து, டீயில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். அதன்பின்னர் தானும் அதனை அருந்தினார். சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த முரளி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News